சென்னை: கோடநாடு கொள்ளை, கொலைச் சம்பவம் தொடர்பான தடயங்கள் அழிக்கப்பட்டுள்ளதா என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முக்கிய தடயங்கள் அழிந்துவிடாமல் இருக்க நடவடிக்கை தேவை என அவர் வலியுறுத்தி உள்ளார். இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பும் புது விவாதங்களும் எழுந்துள்ளன.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், கோடநாடு சம்பவம் தொடர்பான விசாரணை முறையாக நடைபெற வேண்டும் என்றும் உண்மையான குற்ற வாளிகளை அரசு தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
“கோடநாடு கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. சம்பவம் நடைபெற்றபோது ஓ.பன்னீர்செல்வம்தான் துணை முதல்வராக இருந்தார். இந்த வழக்கில் குற்றவாளி களைக் கண்டுபிடிக்க நடை பெறும் போராட்டங்களுக்கு எங்களுடைய ஆதரவும் உண்டு,” என்றார் தினகரன்.
அமமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருப்பதாகக் கூறப்படுவது உண்மையல்ல என்றும் எதிர்வரும் தேர்தல்களில் கூட்டணி அமையாவிட்டாலும் அமமுக தனித்துப் போட்டியிடத் தயாராக உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

