மதுரை: கல்வியும் சுகாதாரமும்தான் தமிழக அரசின் இரு கண்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்து பேசிய அவர், தரமான கல்வியில் முதலிடம் பெற தமிழக அரசு உழைத்து வருவதாகக் குறிப்பிட்டார்.
“அதனால்தான், அண்மையில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையை சென்னையில் திறந்து வைத்தேன். ஒரு மாதம் கழித்து ஜூலை 15ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை மதுரையில் திறந்து வைத்திருக்கின்றேன்.
“இந்திய அளவில் தரமான கல்வியை வழங்குவதில் இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகத்தை, முதலிடத்துக்குக் கொண்டுவர தொடர்ந்து உழைக்கிறோம். மேலும், அனைத்துவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அறச்சீற்றம் கொண்டு கண்ணகி எரித்த மதுரை நகரத்தில், லட்சக்கணக்கான நூல்கள் கொண்ட கலைஞர் நூலகத்தின் மூலம் அறிவுத் தீ பரவப் போவதாகக் குறிப்பிட்ட அவர், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாமதுரைதான் நூலகம் அமைய பொருத்தமான இடம் என்றார்.


