திண்டுக்கல்: காகித பேனாக்கள் தயாரித்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க விரும்பும் தமிழக இளையரைப் பலரும் பாராட்டி உள்ளனர்.
அந்தப் பேனாவின் பின்புறத்தில் இலவம் பஞ்சு, அரளி, பூவரசன் உள்ளிட்ட காட்டு மரங்களின் சிறிய விதைகளை வைப்பதாகவும் பேனாவை தூக்கி எறிந்தாலும் அந்த விதைகள் செடியாகி, மரமாகிவிடும் என்றும் இளையர் சிவபாலன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், அருகே அய்யம் பாளையத்தைச் சேர்ந்த இவர், பொறியியல் துறையில் டிப்ளமோ படிப்பை முடித்துள்ளார். பொருளியல் வசதி இல்லாததால் ஏதேனும் சிறுதொழிலில் ஈடுபட முடிவு செய்தவர், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் காகித பேனா தயாரிக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்.
“எனது குடும்ப உறுப்பினர்களே காகித பேனா தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் “பால்பாய்ண்ட் பேனாக்கள், நெகிழிப் பொருள்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.
“காகித பேனாக்கள் 99.5% நெகிழி கலப்பு இல்லாதது. இவற்றை தூக்கி எறிந்தாலும் மக்கிவிடும். மேலும் சிறப்பம்சமாக காகித பேனாவின் பின்புறம் உள்ள மாத்திரை குமிழியில் விதைகளை வைக்கிறோம்.
“மண்ணில் விழுந்தாலும் அந்த விதை முளைப்புதிறன் பெற்று செடி, மரமாக வளர்ந்துவிடும்,” என்கிறார் சிவபாலன்.
ஒரு காகித பேனாவின் விலை ஐந்து ரூபாய் என்று விலை நிர்ணயித்துள்ளதாகவும் இணையம் வழியும் விற்பனை செய்வதாகவும் கூறுகிறார். திருமண நாள், பிறந்தநாள் கொண்டாட்டங்களின்போது காகித பேனாக்களை பரிசளிக்க மக்கள் முன்வர வேண்டும் என்றும் இளையர் சிவபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.