சென்னை: மின்சார ரயிலின் அபாயச் சங்கிலியை இழுத்து ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி பகுதி வரை நாள்தோறும் பறக்கும் ரயில் இயக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கானோர் இச்சேவையைப் பயன்படுத்துகின்றனர்.
பறக்கும் ரயிலில் பயணம் மேற்கொள்ளும் கல்லூரி மாணவர்கள் சிலர் தொடர்ந்து மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு சேட்டைகளில் ஈடுபட்டு வருவதாக தொடர் புகார்கள் எழுந்தன.
அண்மையில் சில மாணவர்கள் கத்தி, அரிவாள்களுடன் பயணம் மேற்கொண்டதுடன், பயணிகளை அச்சுறுத்தும் விதமாக அங்கும் இங்கும் ஓடியுள்ளனர். சில மாணவர்கள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி உள்ளனர்.
இதனால் பயணிகள் பெரும் பீதிக்கு ஆளாகினர். இச்சம்பவம் தொடர்பாக மூன்று மாணவர்கள் கைதாகி உள்ளனர்.
இந்நிலையில், மாணவர்களுக்கு காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

