திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் வளத்திகோவிலான் என்ற 70 வயது தொழிலாளி தனது 50 வயது மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
எழிலரசி என்ற அந்த மனைவி தனியார் நிறுவனத்தில் துப்புரவு ஊழியராக வேலை பார்த்தார். அவர்கள் வசித்த வீட்டின் அருகே மொத்தம் ஆறு வீடுகள் இருக்கின்றன.
ஒரு வீட்டைத் தவிர எல்லா வீடுகளும் காலியாக உள்ளன. அந்த ஒரு வீட்டில் வட இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் மட்டும் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில், வாடகைப் பணத்தை வசூலிப்பதற்காக வீட்டின் உரிமையாளர் வளத்திகோவிலான் வீட்டுக்குச் சென்றபோது வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியதைக் கண்டு உடனே காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார் .
காவல்துறையினர் வந்து வீட்டை உடைத்து திறந்து பார்த்தபோது வீட்டின் உள்ளே ஒரு பீப்பாயில் வளத்திகோவிலான் உடல் திணிக்கப்பட்டு இருந்தது.
அவர் 10 நாட்களுக்கு முன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் நம்புகிறார்கள்.
இந்த நிலையில், மனைவி எழிலரசி தலைமறைவாகிவிட்டார்.
எழிலரசிக்கும் சிலருக்கும் இடையில் கள்ளத்தொடர்பு இருக்கலாம் என்றும் அதுவே கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கும் அதிகாரிகள் எழிலரசியை தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்
எழிலரசி மட்டும் தனியாக இந்தக் கொலையைச் செய்து இருக்க முடியாது என்று நம்பும் அதிகாரிகள் பல கோணங்களில் விசாரணைகளைத் தொடங்கி இருக்கிறார்கள்.
என்றாலும் இதுவரை எந்தத் தடயமும் கிடைக்கவில்லை என்றும் எழிலரசி சிக்கினால்தான் எல்லாம் தெரியவரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருந்தாலும் எழிலரசி பயன்படுத்தி வந்த கைப்பேசி எண்ணை வைத்து அதிகாரிகள் முழுமூச்சில் துப்புதுலக்கி வருகிறார்கள்.

