சென்னை: காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைநகரங்களில் நடந்தது.
சென்னை மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடந்த கண்டன போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
போராட்டத்தின் போது விலைவாசி உயர்வுக்கு எதிராக பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் கழுத்தில் காய்கறிகளை மாலையாக அணிந்தபடி முழக்கமிட்டனர்.
தக்காளி விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தக் கோரி கையில் பதாகைகளை ஏந்தியபடி ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.
அதிமுக ஆட்சியில் தக்காளி விலை ஏற்றத்தின்போது அரசே அவற்றைக் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வழங்கியதைச் சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் பேசினர்.
போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார், கமலக்கண்ணன், முன்னாள் எம்பிக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தினால் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் சாலை அதிமுக தொண்டர்களால் நிரம்பியது.
இதேபோல், ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்டம் சார்பில் மதுரவாயல் மின்சார அலுவலகம் அருகிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதிலும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.