விருதுநகர்: வருவாய்த் துறை அமைச்சர் ராமச்சந்திரன் உள்ளிட்ட மூன்று பேரை லஞ்ச ஊழல் துறையின் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிப்பதாக விருதுநகர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு அளித்தது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக இப்போதைய வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அவரது மனைவி மற்றும் தொழிலதிபர் சண்முக மூர்த்தி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் திருவில்லிப்புத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
2022ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தங்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் வழக்கு தொடரப்பட்டது எனவும் தன் மீதான குற்றச்சாட்டுக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை எனவும் அமைச்சர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அதன்பின்னர் கடந்த ஜூன் 27ஆம் தேதியும் விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளித்த விருதுநகர் மாவட்ட நீதிமன்றம், அமைச்சர் ராமச்சந்திரன் உள்ளிட்ட 3 பேரையும் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிப்பதாக அறிவித்தது.

