சிவகங்கை: கீழடி பகுதியில் நடைபெற்று வரும் ஒன்பதாம் கட்ட அகழாய்வுப் பணிகளுக்காக கூடுதலாக இரண்டு குழிகளைத் தோண்டும் பணி தொடங்கியுள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ள கொந்தகை பகுதியில் தற்போது அகழாய்வுப் பணி நடைபெறுகிறது.
கீழடியில் ஏற்கெனவே ஏழு குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து சுடுமண் பொம்மை, நெசவுத் தக்கழி, ஆட்டகாய்கள், கண்ணாடி மணிகள், எலும்பினால் செய்யப்பட்ட கூர் முனை உள்ளிட்ட அரிய தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
“இந்நிலையில், கொந்தகையில் மேற்குப் பகுதி சுத்தம் செய்யப்பட்டு மேலும் இரண்டு குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. கீழடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை காண வரும் பார்வையாளர்கள் ஏழாம் கட்ட அகழாய்வுத் தளம், திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டதால் அதனையும் கண்டு ரசித்து வருகின்றனர்,” என்று தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே அருப்புக்கோட்டையில் 1,200 ஆண்டுகளுக்கு முந்தைய கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை அருகே விளாத்திகுளம் வைப்பாறு கிராமத்தில் உள்ள கோவிலில் இச்சிலை இருந்ததாகவும் அது மிகவும் தேய்ந்து சிதைந்து காணப்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.