சென்னை: சாலையின் நடுவே பிறந்தநாள் கேக் வெட்டியதைத் தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுநர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் சென்னை அம்பத்தூர் பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
வியாழக்கிழமையன்று அம்பத்தூரைச் சேர்ந்த அஜய் என்பவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடினார். சாலையின் நடுவே பெரிய கேக் ஒன்றை, நண்பர்கள் புடைசூழ அவர் வெட்டினார்.
அப்போது, அவ்வழியே சென்ற ஆட்டோ ஓட்டுநர் காமேஷும் அவரது நண்பர் சதீஷும் இதைக்கண்டு கோபமடைந்தனர். இதையடுத்து அஜய், அவரது நண்பர்களிடம் இவ்வாறு செய்வது சரிதானா, போக்குவரத்து பாதிக்கப்படாதா என்று காமேஷ் கேள்விகள் எழுப்பியதாகத் தெரிகிறது.
இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. அப்போது ஆவேசமடைந்த அஜய்யின் நண்பர்கள் ஆட்டோ ஓட்டுநர் காமேஷை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த காமேஷ் அங்கேயே உயிரிழந்தார். அவரது நண்பர் சதீஷுக்கும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து அஜய்யும் அவரது நண்பர்களும் அங்கிருந்து தப்பியோடினர்.
அவர்களுக்கு காவல்துறை வலைவீசியுள்ள நிலையில், படுகாயமடைந்த சதீஷ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்புக் கருவிகளை காவல்துறை ஆராய்ந்து வருகிறது.


