தேனி: இரண்டாயிரம் ரூபாய் நோட்டை மாற்றித் தந்தால் 15 லட்சம் ரூபாய் கமிஷன் அளிப்பதாகக் கூறி சிவாஜி என்ற விவசாயியிடம் 35 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்று மோசடி செய்த கும்பலுக்கு தேனி மாவட்ட காவல்துறை வலைவீசியுள்ளது.
உறவினர் மூலம் பாண்டி என்பவர் சிவாஜிக்கு அண்மையில் அறிமுகமானார். இருவரும் நண்பர்களாகப் பழகி வந்தனர்.
இந்நிலையில், ஈரோட்டில் உள்ள ராஜ்குமார் என்ற நண்பரிடம் 2000 ரூபாய் நோட்டுகள் கோடிக்கணக்கில் இருப்பதாகவும் அதில் தற்போது ரூ.50 லட்சத்தை மட்டும் மாற்றி அவர் முயற்சி செய்வதாகவும் சிவாஜியிடம் தெரிவித்தார் பாண்டி.
தொகை மாற்றும்போது ரூ.35 லட்சம் மட்டுமே கொடுத்தால் போதும் என்றும் மீதமுள்ள ரூ.15 லட்சம் லாபம் என்றும் பாண்டி கூறிய ஆசை வார்த்தைகளைக் கேட்டு மயங்கிப் போனார் சிவாஜி.
இதையடுத்து ரூ.35 லட்சத்துடன் பாண்டி, மூன்று நண்பர்களோடு ஈரோடு சென்றுள்ளார். எனினும் நடுவழியில் இவர்கள் சென்ற காரை காவல்துறை சீருடையில் காணப்பட்ட நான்கு பேர் தடுத்து நிறுத்தி்னர்.
பின்னர் காவல்துறை அதிகாரிகள் என்று கூறி சிவாஜி வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் ராஜ்குமாரை மட்டும் விசாரணைக்கு அழைத்து செல்வதாக கூறி அந்தக் கும்பல் தப்பியோடியது.
கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து முடிய, சில நிமிடங்களுக்குப் பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார் சிவாஜி. அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதையடுத்து அந்த மோசடிக் கும்பல் பிடிபட்டது.