சென்னை: மீனம்பாக்கத்தில் உள்ள சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான முனையம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து, விமானச் சேவைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் கடும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றும் அதன் காரணமாகவே விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே சென்னை விமான நிலையத்தில் அனைத்துலக முனையமாக செயல்பட்டு வந்த ‘டி-3’, ‘டி-4’ ஆகிய இரு முனையங்களும் மூடப்படுகின்றன. அவற்றுள் ‘டி-4’ புதிய கட்டடம் என்பதால், இந்த முனையத்தை புதிய உள்நாட்டு முனையமாக மாற்றுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய உள்நாட்டு முனையம் இயங்கத் தொடங்கியதும் விமான நிலையத்தில் நெரிசல் குறையும் என்றும் செப்டம்பர் மாதத்தில் இருந்து சென்னை உள்நாட்டு விமான நிலையம் இரு பகுதிகளாக இயங்கப்பட உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

