புதுக்கோட்டை: புழல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறப்பு வசதிகள் ஏதும் செய்து கொடுக்கப்படவில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலையில் செந்தில் பாலாஜிக்கு தனி கட்டில், மெத்தை அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவரது அறையில் குளிர்சாதன வசதி உள்ளது என்றும் வெளியான தகவல்களை சட்ட அமைச்சர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இவ்வாறு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தால், அது ஒரு கைதி மூலம் மற்றொரு கைதிக்குப் பரவிவிடும் என்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
எனவே, இந்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதியைக் கொண்டு விசாரனை நடத்த வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருவதை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என்றார் அவர்.
“சிறைச்சாலையில் முதல் வகுப்பு கைதிக்கு என்னென்ன சலுகைகள் உள்ளவோ அவை மட்டுமே அமைச்சருக்கு வழங்கப்பட்டு வருகிறது. கூடுதலாக யாருக்கும் எந்த சலுகையும் வழங்க முடியாது.
“சிறைச்சாலை உணவகத்தில் இருந்து உணவு வாங்கிக் கொள்ள அனுமதி உண்டு. வாரந்தோறும் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள், உணவை வாங்க முடியும். வெளியிலிருந்து உணவு கொண்டு வர அனுமதி இல்லை.
சிறைச்சாலையில் குளிர்சாதன வசதிக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை,” என்று அமைச்சர் ரகுபதி மேலும் தெரிவித்துள்ளார்.

