ஈரோடு: நீதிமன்ற விசாரணைக்கு முன்னிலையாகாமல் இருந்த 39 பேரை முப்பது நாள்களுக்குள் மடக்கிப் பிடித்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய காவல் ஆய்வாளருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 39 பேருக்கு பலமுறை அழைப்பாணை அனுப்பியும் கடந்த பத்து ஆண்டுகளாக முன்னிலையாகாமல் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் முருகேசன், தலைமைக் காவலர் கருப்புசாமி ஆகியோர் கடந்த 30 நாட்களில் 39 பேரையும் பிடித்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி உள்ளனர்.
இதையடுத்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், திங்கட்கிழமையன்று இருவரையும் நேரில் வரவழைத்துப் பாராட்டியதுடன், சிறப்பாகப் பணியாற்றியதற்கான சான்றிதழையும் வழங்கினார்.
அண்மையில் கிருஷ்ணகிரி திரைப்பட விநியோகிப்பாளர் ஒருவர் கடத்தப்பட்டார். அவரை துரித கதியில் மீட்டு கடத்தலில் தொடர்புடையவர்களை மடக்கிப் பிடித்து கைது செய்தார் ஆய்வாளர் முருகேசன்.
இதே போல் மேலும் பல குற்றவாளிகளை அவர் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

