தூத்துக்குடி: அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வரும் ஆதிச்சநல்லூர் பகுதியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.
இதற்கு எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர், வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. அப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான தொல்பொருள்கள் கிடைத்து வருகின்றன.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என கடந்த 2020ஆம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு தொடங்கி இப்பபோது வரை நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியின்போது நூற்றுக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், ஏராளமான பழங்கால பொருள்கள் கிடைத்து வருகின்றன. அவற்றை எல்லாம் ஆவணப்படுத்தும் பணியும் மற்றொரு பக்கம் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க ஆகஸ்ட் 5ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்ட உள்ளதாக மத்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
ஆதிச்சநல்லூரில் இருந்து ஸ்ரீ வைகுண்டம் செல்லும் சாலையின் ஓரத்தில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் இந்த அருங்காட்சியகம் அமையும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் அகழாய்வுக்காக அங்கு தோண்டப்பட்டுள்ள குழிகளுக்கு மேல் கண்ணாடி தளம் அமைத்து, அங்கு கிடைத்த பொருள்களை காட்சிப்படுத்தவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
ஆதிச்சநல்லூரைப் போலவே தூத்துக்குடி மாவட்டத்தில் திருக்கோளூர், அகரம், ஆகிய இடங்களிலும் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு கண்டெடுக்கப்படும் பொருள்களும் அருங்காட்சியகத்தில் இடம்பெற உள்ளன.