திருச்சி: பயங்கர ஆயுதங்களுடன் கூலிப்படையினர் பிடிபட்டதை அடுத்து, திருச்சியில் காவல்துறை கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை திருச்சி மாவட்ட எல்லையில் காவல்துறையினர் வழக்கமான வாகனப் பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் அரிவாள், பட்டாகத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன.
இதையடுத்து, ஆட்டோவில் இருந்த ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், அவர்கள் கூலிப்படையினர் எனத் தெரிய வந்தது. எனினும் யாரை, எதற்காக அவர்கள் திருச்சி நகருக்குள் ஆயுதங்களுடன் நுழைந்தனர் என்பது குறித்து விசாரணை நடக்கிறது. ஐந்து பேர் கைதானதை அடுத்து, திருச்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் காவல்துறையினர் சோதித்து வருகின்றனர்.