ராமேசுவரம்: முன்னாள் அதிபர் அப்துல் கலாமின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நாட்டு மக்கள் அவருக்குப் புகழஞ்சலி செலுத்தினர்.
ராமேசுவரத்தில் உள்ள தேசிய நினைவிடத்தில் அப்துல் கலாம் சிலைக்கு அவரது குடும்பத்தினர், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானார் நேரில் மரியாதை செலுத்தியதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அப்துல் கலாம் தேசிய நினைவிடத்தில் உள் கட்டமைப்புகளைத் தவிர மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்று கலாமின் அண்ணன் பேரன் ஷேக் தாவூத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
புதிதாக கட்டப்படும் பாம்பன் ரயில் பாலத்துக்கு அப்துல் கலாம் பெயரைச் சூட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
“அறிவுசார் மையம், மின்னிலக்க நூலகம், ஆராய்ச்சியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அறிவிக்கப்பட்ட தொழில்நுட்ப கண்காட்சியகம், அறிவியல் ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்,” என்று ஷேக் தாவூத் வேண்டுகோள் விடுத்தார்.