ராமேசுவரம்: இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பலத்த பாதுகாப்புடன் சனிக்கிழமை அதிகாலை ராமேசுவரம் கோயிலுக்குச் சென்ற அமித்ஷா ராமநாதசுவாமியை தரிசனம் செய்தார்.
கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் அவருடன் இருந்தனர்.
அமித்ஷா வருகையை முன்னிட்டு கோயிலில் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதுகுறித்து தமது டுவிட்டரில் பதிவிட்ட அமித்ஷா, “ராமேசுவரம் கோவிலில் ஆரத்தி மற்றும் அபிஷேகம் செய்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான பிரபு ஸ்ரீ ராம் பகவான், சிவனை வழிபட்ட இடம் இது. நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும் நமது தேசத்தின் செழிப்பிற்காகவும் பிரார்த்தனை செய்தேன்,” என்று தெரிவித்துள்ளார்.

