நெய்வேலி: நெய்வேலி என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிற்சங்க தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 26ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
8வது நாளாக புதன்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தொழிலாளர்கள் இரவு-பகல் பாராமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுடன் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.
இந்தப் பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க நிர்வாகிகள், என்எல்சி நிர்வாகத்தினர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில், என்எல்சி நிறுவனத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி கடலூர் மாவட்ட காவல்துறைக்கு என்எல்சி நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளது.
தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக அன்றாட செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் என்எல்சி நிறுவனம் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டம் காரணமாக பீதி மற்றும் பதற்றமான சூழ்நிலை உருவாகிறது என்று என்எல்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அரசியல் தலைவர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதால் தலைமை அலுவகம் எப்போது தடை செய்யப்பட்ட பகுதியாகவே இருக்கிறது.
அந்தத் தடை செய்யப்பட்டுள்ள பகுதியில் போராட்டம் நடைபெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் என்எல்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே நடவடிக்கை எடுக்கவேண்டுமென அது கூறியுள்ளது.