சென்னை: தமிழக வருவாய் இயக்குநரகத்தின் வேவுத்துறை அதிகாரிகள் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஏழு மாதங்களில் 163 கிலோ கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.
அவற்றின் மதிப்பு சுமார் 97 கோடி ரூபாய். மொத்தம் 43 பேர் கைது செய்யப்பட்டனர். தங்கம் கடத்தல் தொடர்பில் 29 வழக்குகள் தொடுக்கப்பட்டு உள்ளன. கைதானவர்கள் தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் பிடிபட்டவர்கள் என்று இந்தத் துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக வருவாய் இயக்குநரகத்தின் வேவுத்துறை அதிகாரிகள் கடந்த திங்கட்கிழமை ராமநாதபுரம் கடற்கரைப் பகுதியில் உள்ள தங்கச்சிமடத்தில் நால்வரைக் கைது செய்தனர்.
அந்தச் சந்தேகப் பேர்வழிகள் மீன்பிடிப் படகு ஒன்றில் ரூபாய் 5.37 கோடி மதிப்புள்ள தங்கத்தை இலங்கையில் இருந்து இந்தியாவுக்குள் கடத்திவர முயன்றனர்.
அதிகாரிகள் கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர்.
இதர இரண்டு படகுகளும் பிடிபட்டன. அவை இலங்கையில் இருந்து தங்கத்தை இந்தியாவுக்குள் கடத்திவர பயன்படுத்தப்பட்டவை என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
பிடிபட்ட நால்வரும் மேல் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். தங்கச்சிமடத்தில் சந்தேக நபர்கள் நால்வர் பிடிபட்டதை அடுத்து அதிகாரிகள் அது பற்றி விளக்கம் அளித்தனர்.
இலங்கையில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. அதையடுத்து அதிகாரிகள் இரவு முழுவதும் கடலோரப் பகுதிகளில் சுற்றுக்காவலை தீவிரப்படுத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
நடுக்கடலில் சில படகுகள் வந்து கொண்டு இருந்ததைப் பார்த்த அதிகாரிகள் அவற்றை விரட்டினர். மூன்று படகுகளும் நான்கு பேரும் சுற்றி வளைக்கப்பட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினார்.