புதுடெல்லி: இந்திய அரசாங்கம் மடிக்கணினிகள், கைக்கணினிகள், தனிப்பட்ட கணினிகள் ஆகியவற்றின் இறக்குமதிக்குக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் உடனடியாக நடப்புக்கு வருவதாக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அரசாங்க அறிக்கை தெரிவித்தது.
“அவற்றின் இறக்குமதி, கட்டுப்படுத்தப்படும் இறக்குமதிகளுக்கான உரிமத்துடன் அனுமதிக்கப்படும்,” என்று அறிக்கை தெரிவித்தது.
“இந்தியாவில் உற்பத்தியைத் தூண்டுவது இதற்கான நோக்கம்,” என்று MAIT எனும் மின்னணுத் தொழில்துறை அமைப்பின் முன்னாள் தலைமை இயக்குநர் அலி அக்தார் ஜஃப்ரி கூறினார்.
மின்னணுத் துறை உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட துறைகளில் உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்புகளை வழங்குவதன்மூலம் உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க இந்தியா தூண்டுதல் அளித்து வருகிறது.
இவ்வாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை, கணினிகள் உள்ளிட்ட மின்னணுப் பொருள்களின் இறக்குமதி $19.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது சென்ற ஆண்டைவிட 6.25 விழுக்காடு அதிகம். இந்தியாவின் மொத்த பொருள் இறக்குமதிகளில் ஏழு முதல் பத்து விழுக்காடு மின்னணுப்பொருள் இறக்குமதி.
தகவல் தொழில்நுட்பப் பொருள் உற்பத்தித்துறைக்குப் பெரிய அளவிலான முதலீடுகளை ஈர்ப்பதற்காக அறிவிக்கப்பட்ட $2 பில்லியன் அமெரிக்க டாலர் ஊக்குவிப்புத் திட்டத்தின் விண்ணப்பக் காலக்கெடுவை இந்தியா நீட்டித்துள்ளது.
எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்குள் $300 பில்லியன் டாலர் பெறுமானமுள்ள மின்னணுப் பொருள்களை ஆண்டுதோறும் உற்பத்தி செய்வது இந்தியாவின் இலக்கு.
இந்தியச் சந்தையில் டெல், ஏசர், சாம்சுங், எல்ஜி இலக்ட்ரானிக்ஸ், ஆப்பிள், லெனோவோ, ஹெச்பி போன்ற நிறுவனங்களின் மடிக்கணினிகள் விற்கப்படுகின்றன. அவற்றில் பெரும்பகுதி சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
இதற்கிடையே, புதிய கட்டுப்பாடுகள் பற்றிய செய்தி வெளிவந்ததைத் தொடர்ந்து, இந்திய மின்னணு உற்பத்தியாளரான டிக்சன் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஐந்து விழுக்காட்டுக்குமேல் அதிகரித்தது.
மடிக்கணினிகள், கைக்கணினிகள், தனிப்பட்ட கணினிகள் ஆகியவை இந்தியாவின் மொத்த வருடாந்தர இறக்குமதியில் சுமார் 1.5 விழுக்காடாகும். அவற்றில் கிட்டத்தட்ட பாதி சீனாவிலிருந்து தருவிக்கப்படுவதாக அரசாங்கப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.