சென்னை: மும்பையில் இருந்து திருட்டு மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு வந்து, சாலையில் தனியாகச் செல்லும் பெண்கள், கடைகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் பேச்சு கொடுத்து அவர்களின் கவனத்தைத் திசை திருப்பி நூதனமாக அவர்களிடம் இருந்து நகைகளைத் திருடிக்கொண்டு மும்பைக்கு ஓடிப்போய் விடுவார்கள்.
அந்த நகைகளை விற்று அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்த மும்பைத் திருடர்கள் இருவரை காவல்துறை கைது செய்துள்ளது.
மேலும் இவர்கள், ஆதம்பாக்கம், கோட்டூர்புரம், ராமாபுரம், திருப்பூர் உள்பட 9 இடங்களில் இதேபோல் கடைகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் நகை வாங்குவதுபோல் நடித்தும், தனியாக நடந்துசெல்லும் பெண்களிடம் நகைகளை பாதுகாப்பாக அணிந்து செல்லும்படி அறிவுரை வழங்குவதுபோல் நடித்தும் நூதன முறையில் வழிப்பறி செய்ததும் தெரிந்தது.
மும்பையில் திருட்டு மோட்டார் சைக்கிள்கள் கிடைக்கவில்லை என்றால் அங்கிருந்து சென்னை மற்றும் கோவைக்கு விமானத்தில் பறந்துவந்து கொள்ளையடித்துச் சென்றதும் தெரியவந்தது.
சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள கண்ணாடி கடையில், கண்ணாடி வாங்குவதுபோல் நடித்த ஆடவர் இருவர், அங்கு வேலை செய்த பாண்டிசெல்வி (வயது 23) என்ற பெண்ணின் கழுத்தில் இருந்த 1½ பவுன் தங்க சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடிப்போயினர். இதுபற்றி மடிப்பாக்கம் காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.
சென்னை காவல்துறை ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் கூடுதல் ஆணையாளர் பிரேம் ஆனந்த் சிம்ஹா, சென்னை தெற்கு இணை ஆணையாளர் சிபி சக்கரவர்த்தி ஆகியோர் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் மடிப்பாக்கம் கைவேலி பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் சந்தேகப்படும் வகையில் காணப்பட்ட இரண்டு பேரிடம் காவல்துறை அதிகாரிகள் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள், மும்பையைச் சேர்ந்த குலாப் அப்பாஸ் (40), சக்லன் மஷ்லூன் (22) என்பதும், அவர்கள் பாண்டிச்செல்வியிடம் சங்கிலி பறித்த கொள்ளையர்கள் என்பதும் தெரியவந்தது. அந்த இருவரையும் காவல்துறை கைது செய்தது. அவர்களிடம் இருந்து 3½ பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.