புதுடெல்லி: தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவரை விசாரிக்கவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்குத் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் திரு செந்தில் பாலாஜியிடம் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அவரது வீட்டில் விசாரணை நடத்திய பிறகு அவரை நள்ளிரவில் கைதுசெய்தனர்.
அப்போது அவருக்குத் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கை தவறானது என்றும் காவலில் எடுத்து விசாரிக்கக்கூடாது என்றும் திரு செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். அதையடுத்து அந்த வழக்கை விசாரித்தார், மூன்றாவது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன்.
“கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்தத் தடையும் கோர முடியாது. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர்தான். தான் குற்றம் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும். கைது செய்யப்பட்டால் நீதிமன்றக் காவல் எடுக்க வேண்டியது அவசியம். அமலாக்கத் துறைக்குக் காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளது” என்று அவர் தீர்ப்பளித்தார்.

