புதுக்கோட்டை: சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜயபாஸ்கருக்கு புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் முன்னிலையாகும்படி ஆணை பிறப்பித்துள்ளது.
ஆகஸ்ட் 29ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விஜய் பாஸ்கரும் அவரது மனைவியும் நேரில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் மீதும், இவரது மனைவி ரம்யா மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக, புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் கடந்த 2021ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகம், ஆதரவாளர்களின் வீடுகள் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த வழக்கில் அவர் மீது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்புத் துறையினர் தாக்கல் செய்தனர். அதனடிப்படையில் நீதிமன்றம் இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வருகிறது.


