காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் காமாட்சி, 28, என்பவர் கடந்த செய்வாய்கிழமை ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
அந்த மருத்துவமனையில் உள்ள மகப்பேற்று நலப்பிரிவு பிரிவு அருகே திருவாட்டி காமாட்சியின் உறவினர்கள், அவர்களின் பிள்ளைகளுடன் தங்கியிருந்தனர். அவர்களுடன் அடையாளம் தெரியாத ஒரு மாது சில நாள்களாக அன்பாகப் பழகினார்.
திடீரென்று இரண்டு பிள்ளைகளை புதன்கிழமை காலையில் காணவில்லை. உறவினர்கள் உடனடியாக அது பற்றி மருத்துவமனை நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
காவல்துறை விரைந்தது. உறவினர்களை விசாரித்தபோது மூன்று நாள்களாக ஒரு பெண்மணி தங்களுடன் பழகினார் என்றும் அவர்தான் பிள்ளைகளைக் கடத்திச் சென்று இருக்கக்கூடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
ஒரு பெண்மணி சந்தேகத்திற்கு இடமான நிலையில் மகப்பேற்று நலப்பிரிவு அருகே வந்து செல்வது கண்காணிப்புப் படக்கருவிமூலம் தெரியவந்தது. அதில் அவருடைய முகம் சரியாக தெரியவில்லை.
ஆகையால், அந்தப் பகுதிகளில் இருந்த ஏறத்தாழ 200 கண்காணிப்புப் படக்கருவிகளை அதிகாரிகள் பரிசோதித்தனர்.
ஒரு பெண்மணி இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு பேருந்து நிலையம் வழியாக சென்றது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அந்தப் பெண்மணியின் புகைப்படத்தைக் காவல்துறையினர் வெளியிட்டனர்.
ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு சந்தேக மாதைக் கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினர் முழுவீச்சுடன் செயல்பட்டு வருகின்றனர்.