சென்னை: இந்தோனீசியாவின் மேடான் நகருக்கும் சென்னைக்கும் இடையே நேரடி விமானச் சேவை தொடங்கி உள்ளது.
இதன் மூலம் சென்னைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இயற்கை வளம் மிகுந்த மேடான் நகர் இந்தோனீசியாவின் முன்னணி சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. கொரோனா நெருக்கடி காலத்துக்கு முன்பு மேடானுக்கும் சென்னைக்கும் இடையே நேரடி விமானச் சேவை இருந்து வந்தது. பின்னர் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் இச்சேவை நிறுத்தப்பட்டது.
இதனால் சென்னையில் இரநு்து மேடான் செல்ல விரும்பும் பயணிகள், சிங்கப்பூர், மலேசியாவுக்குச் சென்று அங்கிருந்து இணைப்பு விமானங்களில் மேடான் சென்றடைந்தனர்.
இந்நிலையில், சென்னை - மேடான் இடையே பத்திக் ஏர் விமான நிறுவனம் நேரடி விமானங்களை இயக்குகிறது.
மேடான் நகரில் இருந்து சனிக்கிழமை அதிகாலை சென்னை வந்தடைந்த முதல் விமானத்தில் பயணம் மேற்கொண்ட அனைவருக்கும் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
“மேடான் நகருக்கு நேரடி விமானம் இயக்கப்படுவது, சுற்றுலா துறையை ஊக்குவிப்பதாக அமையும். இதனால் சுற்றுலா பயணிகள், திரைத்துறைப் படப்பிடிப்புக் குழுவினர், தொழில்துறையினர் பலருக்கு இந்த விமான சேவை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்,” என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

