சென்னை: நீட் மசோதாவுக்கும் தமிழக ஆளுநருக்கும் இனிமேல் எந்தத் தொடர்பும் இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு விலக்கு மசோதா தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இத்தகைய சூழலில் நீட் மசோதாவில் கையெழுத்திட அறவே வாய்ப்பில்லை என ஆளுநர் பேசியிருப்பது வேடிக்கையாக உள்ளது.
“இனி குடியரசுத் தலைவரின் முடிவைப் பொறுத்தே அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும். எனவே ஆளுநருக்கும் அம்மசோதாவுக்கும் இனி தொடர்பே இல்லை,” என்றார் அமைச்சர் சுப்பிரமணியன்.
முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நீட் தேர்வை எதிர்ப்பதன் மூலம் தமிழக, மாணவர்கள் அறிவுசார் மாற்றுத் திறனாளிகளாக உருவாவதை தாம் விரும்பவில்லை என்றார்.
“எனக்கு உரிய அதிகாரம் இருந்தால் நீட் விலக்கு மசோதாவுக்கு நான் ஒருபோதும், எந்தக் காலத்திலும் அனுமதி வழங்க மாட்டேன்,” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார்.


