தஞ்சை: கும்பகோணத்தில் சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியை ஏற்றும் நிகழ்ச்சியின்போது தேசியக் கொடி கீழே விழுந்தது. இதனால் கோபமடைந்த திமுக எம்எல்ஏ அன்பழகன், அந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரை அடிக்கப் பாய்ந்தார்.
இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
செவ்வாய்க்கிழமை கும்பகோணத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் திமுக எம்எல்ஏ அன்பழகனும், கர்னல் சந்திரசேகரனும் இணைந்து தேசியக் கொடியை ஏற்றினர்.
அப்போது நாடா இல்லாத காரணத்தால் தேசியக் கொடி திடீரென கீழே விழுந்தது.
இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில், எம்எல்ஏ அன்பழகன் தனக்கு அருகே நின்றிருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை நோக்கி காட்டத்துடன் பேசினார். மேலும் அவரை அடிக்கவும் கையை ஓங்கினார்.
இதையடுத்து வேறு ஒரு தேசியக் கொடி கொண்டு வரப்பட, அதை கர்னல் சந்திரசேகரன் மட்டும் ஏற்றி வைத்தார்.
எம்எல்ஏ அன்பழகன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை நோக்கி கோபமாகப் பேசியபடியே கையை ஓங்கும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.