சென்னை: இணையம் வழி நடத்தப்படும் சூதாட்டத்தின் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
போனஸ் உள்ளிட்ட கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு அந்நிறுவனங்கள் மக்களை ஏமாற்றுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு குறிப்பிட்டது.
இணைய வழி சூதாட்டத்தை தடை செய்து தமிழக அரசு சட்டம் நிறைவேற்றி உள்ளது. இதற்கு சூதாட்ட நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அந்நிறுவனங்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்போது வழக்கமான சீட்டு (ரம்மி) விளையாட்டைவிட இணைய வழி நடைபெறும் சூதாட்டம் முழுக்க, முழுக்க மோசமானது என்று அரசு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாகவே இந்தச் சூதாட்ட விளையாட்டுக்கு தமிழக அரசு தடை விதித்தது என்று அவர் கூறினார்.
இணைய வழி சூதாட்டத்தில் பங்கேற்ற பலர் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமடைந்ததை அடுத்து அதற்கு தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
அதை ஏற்று அச்சூதாட்டத்துக்குத் தடைவிதித்து தமிழக அரசு சட்டப்பேரவையில் மசோதா ஒன்றை நிறைவேற்றியது.