என்எல்சி சுரங்கத்தில் வாகனம் கவிழ்ந்து விபத்து: 32 தொழிலாளர்கள் காயம்

என்எல்சி சுரங்கத்தில் வாகனம் கவிழ்ந்து விபத்து: 32 தொழிலாளர்கள் காயம்

2 mins read
3fbf6a07-0752-4495-a924-731ce38fe6ca
படம்: - தமிழ் முரசு

கடலூர்: நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தில் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

நெய்வேலி என்எல்சி இந்திய நிறுவனம், மத்திய அரசின் பொதுத்துறை ஆகும். இதில் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சுமார் 15,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிறுவனம் சுரங்கத்தில் இருந்து நிலக்கரியை தோண்டி எடுத்து மின்சாரம் தயார் செய்து தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து வருகிறது.

இந்த நிலையில், என்எல்சி இரண்டாவது சுரங்கத்தில் இன்று (ஆக.16) காலை, என்எல்சி பிக்கப் வாகனத்தில் (தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனம்) சுமார் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்யும் இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அப்போது, அந்த வாகனத்தின் ஓட்டுநர் வாகனத்தை எடுக்கும்போது ஆக்சிலேட்டர் பிரேக் கட் ஆனதால் முன்பக்க அச்சு உடைந்தது.

இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பெட்ரோல் பங்க் அருகே திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் வாகனத்தில் பயணம் செய்த தொழிலாளர்கள் அலறினர்.

அலறல் சத்தம் கேட்டு அருகில் வேலை செய்து கொண்டிருந்த சக தொழிலாளிகள் ஓடிச் சென்று அவர்களை மீட்டனர்.

பின்னர், அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் நெய்வேலி என்எல்சி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 32 தொழிலாளர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அனைவரும் என்எஸ்சி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இது குறித்து தகவலறிந்த நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
விபத்து