கரூர்: கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த எம்.பி. ஜோதிமணியிடம் கிராம பிரமுகர் ஒருவரும் பொதுமக்களும் வாக்குவாதம் செய்த விவகாரம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
கரூர் மாவட்டம், மூக்கணாங்குறிச்சி ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி ஆக.15ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கரூர் எம்.பி. ஜோதிமணி சிறப்புப் பங்கேற்பாளராக கலந்துகொண்டார்.
அப்போது அவரை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த ஒருவர், ‘‘தேர்தலில் வாக்கு கேட்க மட்டும் வந்தீங்க. வெற்றி பெற்ற பிறகு இப்போதுதான் வருகிறீர்கள். தேர்தல் வந்தால்தான் நினைவுக்கு வருமா? உங்களை ஏன் தொடர்புகொள்ள இயலவில்லை?’’ என கேள்வி மேல் கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஜோதிமணி எம்பி, ‘‘கரூர் மக்களவைத் தொகுதியில் 6,600 குக்கிராமங்கள் உள்ளன. அதில் ஒவ்வொரு ஊருக்கும் சென்று மக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தும், அவர்களின் குறைகளைக் கேட்டு வருகிறேன். நீங்கள் பிரச்சினை செய்வதற்காகவே வந்திருக்கிறீர்கள். இதற்கெல்லாம் பயப்படமாட்டேன்.
“பஞ்சாயத்துத் தலைவர் போல ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வரமுடியாது. நீங்கள் ஏற்கெனவே பேசியதையே திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருக்காதீர்கள். நான் சொல்வதையும் காது கொடுத்துக் கேளுங்கள்.
“ஒரு எம்.பி. 100 நாள்கள் நாடாளுமன்றம் செல்லவேண்டும். கட்சி தொடர்பான கூட்டங்களுக்கு 50 நாள்கள் செல்லவேண்டும். இதற்கு இங்கிருந்து சென்று, திரும்ப ஒரு நாளாகும்,’’ என பேசிக் கொண்டே இருக்க, கேள்வி கேட்டவரும் அவருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து அங்கிருந்த சிலர், அந்த ஆடவரை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர்.


