சென்னை: தமிழகத்திலிருந்து 23 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட முருகன் கற்சிலை அமெரிக்காவிலிருந்து மீட்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், தச்சூர் கிராமத்தில், மிகவும் பழமையான அமிர்தகடேஸ்வரர் கோவிலை, டில்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவன் மாலிகாபூர் படையெடுத்து சிதைத்தார்.
இதனால், இரண்டு ஏக்கர் பரப்பளவில் இருந்த அந்தக் கோவிலில், எருக்கஞ்செடி மற்றும் முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. அந்த கோவிலில் பிரம்மா, சண்டிகேஸ்வரர், வருண லிங்கம், சோமாஸ்கந்தர் என, 13 கற்சிலைகள் மண்ணில் புதைந்தன. இவற்றில், நின்ற நிலையில் முருகன் கற்சிலை, 23 ஆண்டுகளுக்கு முன் திருடு போனது. அண்மையில், அந்த ஊரைச் சேர்ந்த பெரியசாமி என்பவர், சென்னை அசோக்நகரில் உள், மாநில சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்தார். கூடுதல் டி.ஜி.பி., சைலேஷ்குமார் யாதவ் தலைமையிலான காவல்துறையினர் முருகன் கற்சிலை, அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டதை உறுதி செய்தனர். அந்தச் சிலை, அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் கட்டுப்பாட்டில் இருப்பதை கண்டறிந்தனர்.
சிலையை வெளியுறவு அமைச்சகம் வாயிலாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

