சென்னை மணலியில் மின்சார கொசுவிரட்டி உருகி தீப்பிடித்த சம்பவத்தில், தூங்கிக் கொண்டிருந்த 3 சிறுமிகள் உட்பட நால்வர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.
உடையார் - செல்வி தம்பதி, மகள்கள் சந்தியா, பிரியா ரக்ஷிதா உட்பட குடும்பமே இதில் பாதிக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்த உணவு விநியோகிப்பாளரான உடையார் கீழ்ப்பாக்கம் கே.எம்.சி., மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செல்வி, தனது கணவருக்கு துணையாக மருத்துவமனையில் தங்கியுள்ள நிலையில், மகள்களை அவரது தாயார் சந்தான லட்சுமி கவனித்து வந்தார். இரவு உடையாரின் மகள்களும் அவரது தங்கை மகள் பவித்ரா பாட்டியுடன் வீட்டில் படுத்து உறங்கியுள்ளார். அப்போது வீட்டில் கொசு விரட்டுவதற்காக போடப்பட்டிருந்த மின்சார கொசுவிரட்டி தீப்பற்றி உருகி, அருகில் இருந்த அட்டைப்பெட்டிகளில் பட்டு தீ பரவியது.
தொடர்ந்து வீடு முழுவதும் புகை சூழ்ந்து நச்சுவாயு வெளியேறிய நிலையில், 3 சிறுமிகளும், மூதாட்டியும் தூக்கத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சனிக்கிழமை காலை உடையாரின் சகோதரி அவர்களை எழுப்ப சென்றபோது வீடு முழுவதும் கரும்புகை சூழ்ந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து காவல் துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, சிறுமிகள் மூவரும், மூதாட்டியும் உயிரிழந்தது தெரியவந்தது.

