ராமநாதபுரம்: திருக்குறளைப் போல் நெறிப்படுத்தி அதிகாரத்தைச் செயல்படுத்தி வருகிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் சார்பில் கோவையில் நடைபெறும் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் திருவிழாவில் காணொளி வாயிலாக உரையாற்றிய அவர், மக்கள் அளித்த அதிகாரத்தை வானளாவியதாக நினைப்பதில்லை என்றார்.
“கோவைதான் தமிழ்நாட்டின் மான்செஸ்டர். சமூக நீதியுடன் சமச்சீர் தொழில் வளர்ச்சி என்பதே அரசின் நோக்கம்.
“இதுவரை 109 நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.10 கோடி வரை ஆதார நிதி வழங்கியுள்ளோம். அனைவரையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியை நோக்கி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழகத்தை புத்தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற மாநிலமாக மாற்றுவதை அரசு இலக்காகக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், அதை எட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.
இதற்கிடையே பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ராமநாதபுரத்தில் தொடங்கி வைத்தார்.

