வேலூர்: அரசு மருத்துவமனையில் இருந்து திருடப்பட்ட பச்சிளங் குழந்தையை எட்டு மணி நேரத்தில் மீட்ட வேலூர் காவல்துறைக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மூன்று நாள்களுக்கு முன்பு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் திருவண்ணாமலையை சேர்ந்த சுந்தர் மற்றும் சூரியகலா என்ற தம்பதியர்க்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், சூரியகலாவுக்கு யாரோ உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளனர். இதனால் அவர் மயக்கமடைந்த நேரத்தில் அவரது குழந்தை கடத்தப்பட்டது.
நினைவு திரும்பியதும் தனது குழந்தையைக் காணாமல் அதிர்ச்சி அடைந்தார் சூரியகலா. இதையடுத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக நான்கு தனிப்படைகள் அமைத்து குழந்தையை தீவிரமாகத் தேட உத்தரவிட்டார்.
இந்நிலையில், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் ஒரு பெண்மணி கையில் குழந்தையுடன் சந்தேகத்திற்கு இடமாக காட்சியளிக்க, காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்தப் பெண் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதையடுத்து, விசாரணை தீவிரமடைந்ததில் அந்தப் பெண் ராணிப்பேட்டையைச் சேர்ந்த பத்மா என்பதும் அவர்தான் குழந்தையைத் திருடினார் என்பதும் உறுதியானது.
பத்மாவை கைது செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அவர் திருடிய குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இவை அனைத்தும் எட்டு மணி நேரத்துக்குள் நடந்து முடிந்தது.