திருநெல்வேலி: சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அவரது மணி மண்டபத்தில், உள்ள அவரது உருவச்சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழ் நாடு அரசின் சார்பில் இந்த நிகழ்ச்சியில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மதிவேந்தன், பேரவைத் தலைவர் அப்பாவு உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஒண்டி வீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தென்மலைப் போர் கண்ட தென்னகத்தின் ஒப்பிலா வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள்.
“கிழக்கிந்தியப் படைகளைத் தன் மதிநுட்பத்தால் வீழ்த்தி, பிறந்த மண்ணின் மானம் காத்த படைத்தளபதி ஒண்டிவீரன் தமிழ்நிலத்தின் போர்க் குணத்திற்குத் தலைசிறந்த சான்று,” என்று குறிப்பிட்டுள்ளார்.


