திருநெல்வேலி: தமிழ்நாட்டில் விரைவில் பாஜக ஆட்சி மலரும் என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தெரிவித்து உள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரையின் முதற்கட்ட நிறைவு விழா திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்று பூபேந்திர யாதவ் பேசுகையில், “மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு முறையாக அமல்படுத்தாதபோதும் தமிழகத்துக்கான பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி தந்துகொண்டே இருக்கிறார்,” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ஊழலும், குடும்ப நலனையும் மக்களை வஞ்சிப்பதையுமே கொள்கையாகக் கொண்ட திமுகவை ஆட்சியிலிருந்து இறக்க வேண்டும்.
“உதயநிதியை முதல்வராக்குவதுதான் திமுகவின் நோக்கமாக இருக்கிறது. இங்குள்ள அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தியபோது கோடி கோடியாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தியாவின் வளர்ச்சியைப் பாதிக்கும் வகையில் நடைபெறும் ஊழல் ஆட்சியை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது.
“தமிழகம் உயர்ந்தால்தான் இந்தியா உயரும் என பிரதமர் சொல்கிறார். தமிழகத்தில் குடும்ப ஆட்சி, ஊழல், அடக்குமுறை அனைத்தையும் மீறி நாம் வெற்றி பெறுவோம். தமிழகத்தில் விரைவில் பாஜகவின் கொடி பட்டொளி வீசி பறக்கும்,” என்று பேசினார்.