போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மைலம்பட்டியில் வசிப்பவர் மாதேஷ், 30. இவரது மனைவி லோகநாயகி, 27. இருவருக்கும் ஈராண்டுக்கு முன் திருமணமானது. லோகநாயகி இளம் வயது முதலே இயற்கை விவசாயம், இயற்கை உணவு மீது ஆர்வம் கொண்டவர்.
திருமணத்துக்குப் பின்னர் தம்பதியர் இருவரும் இயற்கை உணவுப் பொருள்களையே சாப்பிட்டனர். தங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தை எவ்வித மருத்துவச் சிகிச்சையுமின்றி, இயற்கையாகப் பிறக்க வேண்டும் என தம்பதியர் விரும்பினர். அதனால், கருவுற்ற பின்பும் லோகநாயகி மருத்துவ சிகிச்சை பெறாமல் இருந்தார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் லோகநாயகிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் வீட்டிலேயே கணவர் மாதேஷ் பிரசவம் பார்த்தார். ஆண் குழந்தை பிறந்தது.
ஆனால் லோகநாயகிக்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக பெருகோபனபள்ளி வட்டார மருத்துவ அலுவலர் ராதிகா அளித்த புகாரைத் தொடர்ந்து போச்சம்பள்ளி காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.


