சிங்கப்பூர் தொழில்முனைவர்களுக்குத் தெற்காசிய நாடுகளுடன் தொழில்தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் ‘சிங்கப்பூர் தெற்காசிய வர்த்தக, தொழிற்சபை’ எனும் புதிய அமைப்பு ஒன்று அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு மே மாதம் சட்டபூர்வமாகப் பதிவுசெய்யப்பட்டு தொடங்கப்பட்டுள்ள இச்சபையில் சிங்கப்பூரில் தொழில்செய்வோர், தொழில் செய்ய விரும்புவோர், தொழில்துறை மாணவர்கள் உட்பட 150க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.
சிங்கப்பூருக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே தொழில் சார்ந்த தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் இச்சபை அண்மையில் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
இதற்கான நிகழ்வு இம்மாதம் 14ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.
ஏற்றுமதி - இறக்குமதித் தொடர்புகள், தொழில்துறைக் கல்வி மேம்பாடு, வணிக ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மையப்படுத்தித் தொழில் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், கல்வி அமைப்புகள் உட்பட 13 தமிழ்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
இதுகுறித்து சபையின் தலைவர் முனைவர் சின்னு பழனிவேலு, 47, கூறுகையில், “சிங்கப்பூர் தொழில்முனைவர்களுக்குத் தெற்காசிய நாடுகளில் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புகளை வலுப்படுத்தவும், இளையர்கள் மத்தியில் தொழில் செய்யும் ஆர்வத்தை மேம்படுத்தவும், சிறந்த தொழில்முறை நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்ளவும் ஒரு தளத்தை உருவாக்க முனைந்துள்ளோம்,” என்றார்.
மேலும், இம்முயற்சியின் மூலம் தொழில் சார்ந்த பல்வேறு நிறுவனங்களுக்கு இடையிலான தொடர்புகள் மேம்படும் என்றும் துறை சார்ந்த புதிய ஆராய்ச்சித் திட்டங்கள் செயலாக்கம் பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.