கோவை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரண்டு நாள் பயணமாக வியாழக்கிழமை காலை கோவை சென்றார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று அவர் மாணவ - மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக கோவை வரும் ஆளுநருக்கு அனைத்து முற்போக்கு அமைப்புகள் சார்பில் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பைத் தெரிவிக்கப் போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்து இருந்தது.
நீட் தேர்வு எதிர்ப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வருவதைக் கண்டித்து இந்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
பல்கலைக்கழகத்துக்குச் செல்லும்போது கறுப்புக் கொடி காட்ட அந்த அமைப்பினர் முடிவு செய்திருந்தனர். அதைத்தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டனர்.
லாலி ரோடு சந்திப்பில் கூட்டமாக நின்று, கையில் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் கலந்துகொண்ட 39 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

