சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெள்ளிக்கிழமை 71ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதையொட்டி கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதுடன் தொண்டர்களுக்கு இனிப்புகளும் வழங்கப்படுகின்றன.
பிறந்தநாளை முன்னிட்டு விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“ஒவ்வொரு ஆண்டும் எனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து வருகிறேன். எனது கட்சி நிர்வாகிகள் முடிந்த அளவிற்கு மக்களுக்கான நல உதவிகளை ‘இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே’ என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் செய்து வருகிறார்கள்,” என்று அறிக்கை மூலம் விஜயகாந்த் குறிப்பிட்டார்.
மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்களிடம் இருந்து கிடைத்த நன்கொடைத் தொகை மூலம் ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்யப்படும் என்றார் அவர்.
தமது உடல்நலம் குறித்த வதந்திகளை யாரும் நம்பவேண்டாம். தம்மை சந்திக்க வருபவர்கள் யாரும் மலர்க்கொத்து, பொன்னாடை, மாலை போன்ற அன்பளிப்புகளைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.

