கோவை: சந்திரயான்- 3 விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதை அடுத்து, கோவையில் தனியார் கல்லூரி வளாகத்தில் 2.5 அடி ராக்கெட் வடிவிலான கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
கோவை நேரு கல்வி குழுமத்தின் சார்பில் சந்திரயான்-3 வெற்றியடைந்ததை நேரு விமானவியல் கல்லூரியின் மாணவ மாணவியர்கள் நேரு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திரையரங்கில் மிகப்பெரிய திரையில் இஸ்ரோ சார்பில் ஒளிபரப்பப்பட்ட நேரடிக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தனர்.
மாலை 5.00 மணிக்கு துவங்கிய அந்த ஒளிபரப்பு கடைசி 15 நிமிடங்கள் மறக்கமுடியாத அனுபவத்தைத் தந்ததாக மாணவ மாணவியர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தில் 2.5 அடி உயர 10 கிலோ எடை கொண்ட ராக்கெட் வடிவிலான கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
நேரு கல்விக் குழுமங்களின் செயலரும் முதன்மைக் கல்வி அதிகாரியுமான முனைவர். பி. கிருஷ்ணகுமார், கல்விக் குழுமங்களின் முதல்வர்களும் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு வாழ்த்து முழக்கமிட்டனர்.