சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை சிறப்பு நீதிமன்றம் ஆகஸ்ட் 28 வரை நீட்டித்துள்ளது.
அவரை ஆகஸ்ட் 28ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த சிறைத்துறைக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர். அவர் கைதுசெய்யப்பட்டதை எதிர்த்து மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம், சட்டத்திற்குட்பட்டே செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று தீர்ப்பளித்தது.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியது. அதைத்தொடர்ந்து அவரது காவலை ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அன்றைய தினமே, செந்தில்பாலாஜி மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகையும், 3 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களையும் அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டிருந்தார்.