தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜி20 மாநாட்டுக்காக ரூ.10 கோடி மதிப்பில் 28 அடி உயர நடராஜர் சிலை

1 mins read
fc954404-6561-4644-8071-51e6081b9321
டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்ட  மாபெரும் நடராஜர் சிலை. - படம்: ஊடகம்

கும்பகோணம்: ஜி20 மாநாடு நடைபெறும் இடத்தின் முகப்பில் வைப்பதற்காக தமிழகத்தில் இருந்து 28 அடி உயரமுள்ள மாபெரும் நடராஜர் சிலை டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழகத்தின் சுவாமி மலை பகுதியில் இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டது.

ஜி20 அமைப்புக்கு தற்போது இந்தியா தலைமையேற்றுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் டெல்லியில் அந்த அமைப்பின் மாநாடு நடைபெறுகிறது.

இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மாநாட்டு அரங்கின் முகப்புப் பகுதியில் மாபெரும் நடராஜர் சிலையை அமைக்க, மத்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி தேசிய கலை மையம் முடிவு செய்தது.

இந்தச் சிலையை உருவாக்கும் பணி தமிழகத்தின் சுவாமிமலையில் உள்ள தேவ சேனாதிபதி சிற்பக் கூடத்துக்கு வழங்கப்பட்டது.

சிலை தயாரானதை அடுத்து வெள்ளிக்கிழமை அதை டெல்லிக்குக் கொண்டு சென்றனர். ஐந்து பொக்லைன் இயந்திரங்களின் துணையோடு மாபெரும் நடராஜர் சிலை லாரியில் ஏற்றப்பட்டது. வரும் 28ஆம் தேதி இச்சிலை டெல்லி சென்றடையும்.

முன்னதாக, சுவாமிமலையிலிருந்து புறப்பட்ட நடராஜர் சிலையை அப்பகுதி மக்கள் மலர்கள் தூவி வணங்கினர். 28 அடி உயரம், 21 அடி அகலம், 25 டன் எடை கொண்ட இச்சிலையின் மதிப்பு ரூ.10 கோடியாகும்.

குறிப்புச் சொற்கள்