பெரம்பலூர்: தடுப்பணைகள் கட்டாமல் கட்டியதாகக் கூறி, அரசாங்கத்திடம் ரூ.30 லட்சம் பெற்றதாக வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் 2019 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஊழல் தடுப்புக் காவல்துறை அண்மையில் புகார் வந்தது.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில், 45 தடுப்பணைகள் கட்டியதாக அரசு ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெறும் 6 தடுப்பணைகள் மட்டுமே கட்டப்பட்டிருந்தன. 39 தடுப்பணைகள் கட்டப்படாமலேயே அரசிடம் இருந்து ரூ.30.03 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதயைடுத்து வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.அறிவழகன் உள்ளிட்ட ஏழு பேர் மீது மாவட்ட லஞ்ச ஊழல் தடுப்புக் காவல்துறை வழக்குப் பதிவுசெய்துள்ளது.

