சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் இதுவரை 3,500க்கும் மேற்பட்டோர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 400 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு சுகாதார அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“பருவகால நோய்களுக்குத் தேவையான மருந்துகள், மருத்துவப் பொருள்கள் தமிழகத்தில் முன்கூட்டியே கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், டெங்கி, சிக்குன் குனியா போன்ற நோய்கள், மழைக்கால காய்ச்சல்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மாத்திரைகள் சில மாதங்களுக்கு முன்பே வாங்கப்பட்டன,” என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாக தமிழக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெங்கிக் காய்ச்சல் சிகிச்சைக்காக இரண்டு லட்சம் மாத்திரைகள் கைவசம் உள்ளன என்றும் காய்ச்சலுக்கு வழங்கப்படும் பாராசிட்டமால் மாத்திரைகளும் தேவையான அளவு இருப்பில் உள்ளன என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.