பூஜ்: இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லை ஓரமாக சந்தேகமான முறையில் திரிந்து கொண்டிருந்த தமிழ்நாட்டு ஆடவரை அந்த மாநில காவல்துறை கைது செய்து இருக்கிறது.
அவரிடம் எல்லை வரைபடம், கடவுச்சீட்டு, சில கருவிகள், அனைத்துலக ஏடிஎம் அட்டை ஆகியவை இருந்ததைக் கண்ட அதிகாரிகள் அந்த நபரை தடுத்து நிறுத்தினர்.
இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை மாலை நிகழ்ந்தது என்று அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் லட்சுமன் தேவர் என்ற அந்த ஆடவரை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மத்திய அமைப்புகளும் அவரை விசாரிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தச் சந்தேகநபரின் பையில் மும்பையில் இருந்து சுரேந்திரநகர் வரை பயணம் செய்வதற்கான ரயில் பயணச் சீட்டு, ரூ.10,000 பணம் ஆகியவற்றையும் அதிகாரிகள் கண்டனர்.
அவர் அளித்துள்ள விளக்கங்கள் மனநிறைவாக இல்லை என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.