சென்னை: “தேசிய நெடுஞ்சாலைகளில் எவ்விதப் பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், சுங்கக் கட்டணத்தை மட்டும் ஆண்டுதோறும் உயர்த்துவது கண்டிக்கத்தக்கது.
வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுங்கக் கட்டண உயர்வை மத்திய அரசு கைவிட வேண்டும்,” என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் விக்கிரவாண்டி, ஓமலூர், தருமபுரி, சமயபுரம் உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.
குறைந்தது ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.150 உயர்த்தப்படவுள்ளது. உணவு தானியங்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந் நிலையில், சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவது அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கும் வழிவகுக்கும். அதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாவார்கள் என்று அன்புமணி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் எந்தவிதமான வெளிப்படைத்தன்மையும் இல்லை. சென்னையை அடுத்த செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் விதிகளுக்கு முரணாக ரூ.28 கோடி கூடுதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பது இந்திய தலைமைக் கணக்காயரின் தணிக்கை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“சுங்கச்சாவடிகளில் ஈட்டப்பட்டுள்ள வருவாய் குறித்து தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அத்தகைய தணிக்கை செய்து முடிக்கப்படும் வரை அனைத்து சுங்கச்சாவடிகளிலும் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும். வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு கைவிட வேண்டும்,” என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

