சென்னை: தமிழகத்தில் 31,000 அரசுப் பள்ளிகளில் பயிலும் 170,000 மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்துள்ளது.
இந்நிலையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி தினமலர் நாளிதழில் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை தரக்குறைவான, அருவருக்கத்தக்க தலைப்பிட்டு விமர்சிக்கப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அந்த நாளிதழின் போக்கை தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளார்.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (டுவிட்டர்) பக்கத்தில், “உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் ‘எல்லார்க்கும் எல்லாம்’ எனச் #சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்.
‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்துவிடாதே’ என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி. நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை! #தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!” என்று தெரிவித்துள்ளார்.