ஈரோடு: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேயுள்ளது. இருப்பினும் அவ்வப்போது பரவலாக கனமழையும் பெய்து வருகிறது. அவ்வகையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த வாரம் முதல் பல இடங்களில் மழை பெய்தது.
கடந்த புதன்கிழமை இரவு திடீரென சூறாவளிக்காற்றுடன் கனத்த மழை பெய்தது. சென்னிமலை, பவானி, கொடுமுடி உள்ளிட்ட இடங்களில் பெய்த மழை 35 மில்லி மீட்டராகப் பதிவாகியுள்ளது. ஈரோட்டில் 29, 30 ஆகிய இரண்டு நாட்களிலும் கனமழை பெய்தது.
இந்நிலையில் வாழைத் தோட்டங்கள் அதிகமுள்ள கோபிசெட்டிப்பாளையம், வெள்ளாங்கோவில், அய்யம்பாளையம், வெள்ளியங்காடு, குள்ளம்பாளையம் ஆகிய பகுதிகளில் சூறாவளிக் காற்றால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து சாய்துள்ளன. இதனால் வாழை விவசாயத்தை நம்பியுள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.