லாரி மீது கார் மோதி ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட 2 பேர் உயிரிழப்பு

லாரி மீது கார் மோதி ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட 2 பேர் உயிரிழப்பு

1 mins read
aedfb951-1259-4b39-926a-7ff7cef9dddd
விபத்தில் கருப்பசாமி (இடது), அபிமன்னன் இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். - படங்கள்: தமிழக ஊடகம்
Google News Preferred Icon

புதுக்கோட்டை: விராலிமலை அருகே வியாழக்கிழமை நேர்ந்த சாலை விபத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். மற்றோர் ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் செங்கமல நாச்சியார்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் கருப்பசாமி (52). கிருஷ்ணபேரி ஊராட்சி மன்றத் தலைவர் வினோதினியின் கணவர் அபிமன்னன்(52). நடுவப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டிச் செல்வியின் கணவர் கோமதிசங்கர்(52). நெடுங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் சமுத்திரம். இவர்கள் 4 பேரும் சென்னையில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை இயக்குநரை சந்திப்பதற்காக வியாழக்கிழமை அதிகாலை காரில் சென்று கொண்டிருந்தனர். காரை சிவகாசியைச் சேர்ந்த பாஸ்கர் ஓட்டினார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே வான திரையன்பட்டினம் பிரிவு சாலை பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் மோதி கவிழ்ந்தது.

இதில் கருப்பசாமி, அபிமன்னன் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். கோமதிசங்கர், சமுத்திரம், பாஸ்கர் ஆகியோர் படுகாயங்களுடன் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து விராலிமலை காவல்துறையினர் விசாரிக்கின்றனர். கருப்பசாமி, அபிமன்னன் ஆகியோர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
விபத்து